டில்லி

கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டாலும் முகக் கவசம், சமூக இடைவெளி, கை கழுவுதல், சோதனை உள்ளிட்டவை தொடரும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்ற மாதம் 8 ஆம் தேதியில் இருந்து பிரிட்டனில் ஒரு முதிய்வருக்கு கொரோனா ஊசி போடப்பட்டுப் பணி தொடங்கப்பட்டது.  இதைப் போல் பல உலக நாடுகளில் ஏற்கனவே கொரொனா தடுப்பூசிகள் மனிதர்களுக்கு அளிக்கப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளன.  தற்போது ஒவ்வொரு நாடாக தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்து வருகின்றன.  இந்தியாவில் தடுப்பூசிகள் போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளன.

மக்களிடையே தற்போது கொரோனா தடுப்பூசிகளால் முந்தைய வாழ்க்கை நிலை மீளுமா என்பதே ஒரு பெரிய கேள்வியாக உள்ளது.

இந்த கேள்விகளுக்குப் பதில் என்னவென்றால் இது உடனடியாக சாத்தியம் இல்லை என்பதே ஆகும்.   கர்நாடக மாநில கொரோனா எதிர்ப்பு படையைச் சேர்ந்த மருத்துவர் ரவி, , “நாம் எவ்வளவு விரைவாகக் குணமடைந்தாலும் அதன் பிறகும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடங்களுக்கு இந்த பாதிப்பு தொடர வாய்ப்புள்ளது.  எனவே நம்மை நாம் காத்துக் கொள்வதை ஒரு போதும் நிறுத்த முடியாது   எனவே முகக் கவசம், சமுக இடைவெளி, கை கழுவல், சோதனை, சிகிச்சை போன்றவை வெகு நாட்களுக்குத் தொடரும்.

தற்போது நடந்துள்ள கொரோனா தடுப்பூசி சோதனைகள் அனைத்தும் ஒரு சிறிய அளவிலான தன்னார்வலர்களுக்கு போடப்பட்டதாகும்.  அதன் அடிப்படையில் இந்த மருந்துகளின் திறன் குறித்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.  இதன் மூலம் இந்த மருந்துகள் கொரோனாவை அடியோடு அழித்து விடும் என நம்ப முடியாது,   மேலும் இந்த மருந்து அளிக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி எத்தனை காலத்துக்கு இருக்கும் என்பதற்கும் இதுவரை எவ்வித நிரூபணமும் இல்லை.

நம்மால் இந்த தடுப்பூசி அளிக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி  எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் எனத் தெரியாததால் அதை மீண்டும் எந்த ஒரு கால இடைவெளியில் போட வேண்டும் என்பதும் தற்போது நிர்ணயிக்க முடியாது.  ஒரு நோயை முழுமையாக அழிக்க வேண்டும் எனில் அந்த நோய்க்கான தடுப்பூசியை 100% மக்களுக்கு அளிக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் 60% முதல் 70% வரை உள்ள மக்களுக்குத் தடுப்பூசி போடுவதனால் இது எவ்வாறு சாத்தியமாகும் எனத் தெரியவில்லை.

இந்த 60% முதல் 70% வரையிலானோருக்கு மட்டுமே மொத்த 140 கோடி டோஸ் மருந்து தேவைப்படும்.  மிகவும் அதிக திறனுள்ள தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைத்தாலும்  இந்த இலக்கை அடைய மருந்து உற்பத்தியாளர்களுக்கு 6 முதல் 8 மாதங்கள் ஆகும்.  எனவே அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி உடனடியாக கிடைக்காது எனவே கூறலாம்.  தவிர இதுவரை மூன்று தடுப்பூசிகள் மட்டுமே அதிக மக்களிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனைச் சேர்ந்த காமலெயா ரிசர்ச் இன்ஸ்டிடியூட் கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கு கொண்ட 38 பேரிடம் ஒரு ஆய்வை நடத்தியது.  ஆனால் இந்த எண்ணிக்கை போதுமான தில்லை என அந்த ஆய்வில் தெரிய வந்தது.   இந்த சோதனையில் மேலும் அதிகம் பேர் சேர்க்கப்பட்டு தற்போது இந்த மருந்துகள் அதிகபட்சமாக 91% திறனுள்ளது என முதல் டோஸ் முடிந்து 28 நாட்களுக்கு பிறகும்  95% திறனுள்ளது என 42 நாட்களுக்கு பிறகும் தெரிய வந்துள்ளது.

பிரிட்டனில் நடந்த முதல் கட்ட பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசி அளிப்பில் 21 நாட்களுக்குப் பிறகு 95% திறன் உளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த தடுப்பூசி அளிக்கப்பட்டோரில் 65 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளனர். இதன் மூலம் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் போது 5 பேர்க்குத் தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனத் தெரிய வருகிறது.  ஆனால் நிறுவனம் இதை நேரடியாகச் சொல்லாமல் 95% திறனுள்ளது எனச் சொல்கிறது.

இதைப் போல் மாடர்னா தடுப்பூசி 94% திறன் உள்ளதாகவும் ஆக்ஸ்ஃபோர்ட் பலகலைககழக தடுப்பூசி முதல் டோசில் 62% திறன் உள்ளதாகவும் இரண்டாம் டோசும் போடப்பட்டால் 90% திறன் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   இதன் மூலம் முதல் டோஸ் போடப்பட்டோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.   ஏதேனும் தவிர்க்க முடியாத காரணத்தால் இரண்டாம் டோஸை போட்டுக் கொள்ள முடியாதோருக்கு 38% மற்றும் இரண்டாம் டோசை போட்டுக் கொண்டோருக்கு 10% வரை பாதிப்பு ஏற்படலாம்.

அடுத்ததாக கொரொனா தடுப்பூசிகளின் வீரியம் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது இதுவரை தெரிய வாய்ப்பில்லை என்பதே நிபுணர்களின் சந்தேகத்துக்குக் காரணமாக உள்ளது.  இந்த தடுப்பு மருந்து சோதனைகள் சுமார் 2 முதல் 3 மாதங்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டுள்ளன.   எனவே இந்த குறுகிய கால கட்டத்தில் எந்த முடிவும் கிடைக்காது என்பதே உண்மையாகும்.

கொரோனா பாதிப்பு வந்து குணமடைந்தோரின் உடலில் உள்ள ஆண்டி பாடிகள் மீண்டும் கொரோனா தொற்று உண்டாவதைத் தடுக்கும்.  அத்துடன் அவ்வாறு ஆண்டி பாடிகள் இல்லாத உடலிலும் நினைவு செல்கள் உருவாகி நீண்ட நாட்கள் மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.   இதைப் போல் தடுப்பூசிகள் ஒரு வருடத்துக்கு எதிர்ப்புச் சக்தியை அளிக்கலாம் என நம்பப்படுவதாக மருத்துவர் ரவி தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் இந்த எதிர்ப்பு சக்தி 1 முதல் 3 வருடங்கள் வரை மட்டுமே இருக்கும் என்றாலும் அனைவருக்கும் ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி போட வேண்டிய தேவை இருக்காது என அசோகா பல்கலைக்கழக மருத்துவ இயக்குநர் சாஹித் ஜமீல் கூறி உள்ளார்.   இதற்குக் காரணமாகத் தடுப்பூசிகளால் தொற்று குறைவதுடன் கொரோனா வைரசின் ஆயுட்காலம் வரை யாரையும் அது பாதிக்காது எனவும் ஒரு கால கட்டத்தில் வைரஸ் எண்ணிக்கை குறையும் எனவும் அவர் கூறுகிறார்.

மொத்தத்தில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டாலும் கொரோனாவுக்கு முந்தைய இயல்பு வாழ்க்கை திரும்பாது எனவே கூறலாம்.