உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 157 நாடுகளில் ஒரு லட்சத்து 68, 897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனாவில் மட்டும் சுமார் 81,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதர நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,000 அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் 24, 747 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 1,809 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 64 இந்திய குடிமக்கள் மற்றும் 17 வெளிநாட்டினர் அடங்குவார்கள். 17 வெளிநாட்டினர்களில் 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் 1 கனடா நாட்டை சேர்ந்தவர்.

இந்நிலையில் இந்த கரோனா வைரஸ் அச்சம் படப்பிடிப்புகளைப் பாதித்துள்ளது.இந்தி மற்றும் தெலுங்குத் திரையுலகினர் மார்ச் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை எந்தவொரு படப்பிடிப்புமே நடத்தப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தமிழ்ப் படங்களின் படப்பிடிப்புகளைப் பாதித்துள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பும் மார்ச் 19-ம் தேதி முதல் நிறுத்த நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த ‘அண்ணாத்த’ மற்றும் ‘வலிமை’ படங்களின் படப்பிடிப்புக்கான அரங்க வேலைகளும் நிறுத்தப்படவுள்ளன.