சென்னை: தமிழகத்தில்  கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதாக கூறிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தொற்று மேலும் பரவாமல் இருக்க மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று  கூறினார்.
சென்னை கோட்டையில்  இன்று வடகிழக்கு பருவமழை முன்எச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் துறை  அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த  கூட்டத்தில்  அவர் பேசியதாவது:

கனமழை பெய்தாலும் உபரி நீர் மழைநீர் வடிகால் வழியாக தேங்காமல் செல்ல மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் கடலுக்கு செல்லும் போது முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தகவல் தொழில்நுட்ப கருவி மூலம் தகவல் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எல்லா வகையிலும் வடகிழக்கு பருவமழையை சமாளிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இது சோதனையான நேரம். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். ஏற்கனவே அறிவிபத்தபடி அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும். முககவசம் கண்டிப்பாக அணியவேண்டும். வீட்டுக்கு சென்றதும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவவேண்டும். வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
கொரோனாவை பொறுத்தவரை பிற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் படிப்படியாக கொரோனா குறைக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது. அரசு எடுத்த நடவடிக்கை காரணமாக மேற்கொண்ட அதிக அளவிலான பரிசோதனை காரணமாக கொரோனா தொற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்டபொதுமுடக்கத்தில்  90 சதவிகித தளர்வு ஏற்படுத்திய பின்னரும் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது.
அருள்கூர்ந்து மக்கள் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி அரசு வழிகாட்டு முறைகளை பின்பற்றி அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
கொரோனாவுக்கு இன்னும் மருந்து இல்லை. எனவே மக்கள் தங்களை கட்டுப்படுத்தி கொள்ளவேண்டும்.
கொரோனா தொற்று எளிதாக பரவும். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.