சென்னை:  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 315 மாணாக்கர்கள் இடைநின்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இடைநிற்றலில், வடசென்னை பகுதியிலேயே 80சதவிகி மாணாக்கர்கள் இடைநின்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இடைநிற்றலுக்கான காரணம் குறித்து, அவர்களின் பெற்றோர்களிடம் விசாரிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.

தமிழகத்தில் 2015-16 ஆம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 8 சதவீதமாக இருந்த மாணவர்கள் இடைநிற்றல் விகிதம், 2017-18 ஆம் கல்வியாண்டில் 16.2 சதவீதமாக அதாவது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதற்கு காரணமாக,  வறுமையான வாழ்க்கைச் சூழல், மோசமான குடும்பப் பொருளாதாரம், அருகாமைப் பள்ளி இல்லாதது, பெற்றோரின் சமூகச் சூழல், கல்வி குறித்த விழிப்புணர்வின்மை போன்ற சூழ்நிலைகளால் மாணவர்களின் இடைநிற்றல் தொடர்கிறது என்று ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில்,  கொரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்த பொதுமுடக்கம், பொதுமக்கள் மக்களின் வாழ்க்கையை சின்னாப் பின்னப்படுத்தி உள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களும் கடந்த 9 மாதங்களாக திறக்கப்படாததால், ஏழை குடும்பதைச் சேர்ந்த மாணாக்கர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில்,  எல்.கே.ஜி வகுப்பிலிருந்து 12 வயதுக்கு வெளியேறிய மாணவர்களை அடையாளம் காணவும், வரவிருக்கும் கல்வியாண்டில் பள்ளி சேர்க்கைகளை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும்  ஒரு சிறப்பு ஆசிரியர் குழுவை அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஆசிரியர்கள், தெருத்தெருவாக சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி, நடப்பாண்டில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 315 மாணாக்கர்கள் வெளியேறி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அதிகப்பட்சமாக 80 சதவிகித மாணாக்கர்கள் வடசென்னை பகுதியில் வசித்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

அதன்படி, 315 மாணாக்கர்களில்,  96 மாணவர்கள் 9 மற்றும் 10 வகுப்புகளைச் சேர்ந்தவர்களாகவும், 92 மாணவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

அதுபோல,  எல்.கே.ஜி முதல் 5 வரையிலும், 64 முதல் 6 முதல் 8 வரையிலும் 63  மாணாக்கர்கள் உள்ளனர்.

வெளியேறிய 315 மாணவர்களில், 254 பேர், அதாவது  80 சதவீத மாணாக்கர்கள் வடசென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் குடும்பம் பொருளாதார ரீதியாக ஏழ்மையான குடும்பம் என்றும்  அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிகபட்சமாக  திரு.வி.க .நகர் மண்டலத்தில் இருந்து மட்டும் மொத்தம் 130 மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  கார்ப்பரேஷன் கமிஷனர் ஜி.பிரகாஷ், இடைநிற்றல் மாணாக்கர்கள் குறித்து, அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசவும், அதற்கான காரணங்களை கண்டறிந்து, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கவும் நடவடிகக்கை எடுக்கும்படி  ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.

கொரோனா முடக்கம் காரணமாக, பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்ட ஏழை மக்கள்,  சமூக சூழ்நிலை, வறுமை, பெற்றோரின் கவனிப்பு இல்லாமை மற்றும் தேர்வுகளில் தோல்வி போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்ட நிலையில், குடும்ப சூழ்நிலைகள் மற்றும் பொருளாதார நிலைமைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், அவர்கள் வாழ்வாதாரத்தை தேடிச்செல்லும்போது, இதுபோன்ற இடை நிற்றல்கள்  ஏற்படுகின்றன கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வாழ்வாதாரத்தை மீட்க வேண்டிய கட்டாயத்தில், பணம் சம்பாதிக்கும் நோக்கில் உயர்கல்வி மாணாக்கர்கள் கல்விச்சாலையை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுவதாகவும், “வீட்டிலுள்ள சூழல் அவர்களின் படிப்புகளுக்கு ஆதரவாக இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

வடசென்னையில் ஏராளமான வீட்டற்றவர்கள் குடியிருந்து வரும் நிலையில், கொரோனா முடக்கம் அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியதுடன்,  அவர்களுக்கு, தொழில்நுட்பம் மற்றும் கல்விப் பொருட்களுக்கான அணுகல் ஒரு பெரிய சவால் என்று தெரிவித்துள்ள  தாழ்த்தப்பட்ட நகர சமூகங்களுக்கான தகவல் மற்றும் வள மையத்தின் வனேசா பீட்டர் (ஐ.ஆர்.சி.டி.யூ.சி),  இந்த காலங்களில், பெற்றோருக்கும் முறையான வேலை இல்லாமல் இருக்கலாம், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உதவக்கூடிய நிலையில் இருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது 15 வயதிற்குட்பட்டவர்கள் வேலைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில்,அவர்கள்  அவர்களுக்கு ஒரு புத்தகம் கொடுப்பது உதவாது ”என்றும், குழந்தைகளின் கல்விக்காக எந்தவொரு  திட்டம் கூட இல்லை என்று மத்திய மாநில அரசுகளை சாடியுள்ளார்.