கிருஷ்ணகிரி:

கொரோனாவுக்கு இரண்டு ரூபாய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகக் கூறி, கிருஷ்ணகிரி மருத்துவர் அளித்த மனுவை பரிசீலித்து விரைந்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையைச் சேர்ந்த மருத்துவர் வசந்தகுமார். இவர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதுகுறித்த ஆராய்ச்சி கட்டுரைகளுடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு மனு அனுப்பியிருந்தார். இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாததை அடுத்து, தனது மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்கும்படி, மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கும் உத்தரவிடக் கோரி செனை்ன உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவர் வசந்தகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் கண்டுபிடித்துள்ள பீட்டா அட்ரெனர்ஜிக் பிளாக்கர்ஸ் மருந்து, சார்ஸ் மற்றும் கொரோனா வைரஸ் உடல் செல்களில் நுழையவிடாமல் தடுக்கும் எனவும் தெரிவித்தார்.