சென்னை;

மிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பும் 7 ஆக உயர்ந்துள்ளது. இதை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபடுத்தி உள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

பிரதமர் மோடியின் வலியுறுத்தலின் பேரில் நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்தவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில்  3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டிருந்த நிலையில், தாய்லாந்து நாட்டை சேர்ந்த இருவர், நியூசிலாந்து நாட்டில் இருந்து வந்த ஒருவர் என நேற்று ஒரே நாளில் மட்டும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.  தற்போது, ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்தவரைத் தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான நபர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் மட்டும் கொரோனா வைரசுக்கு  300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் ஒருவர், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் என இன்று மட்டும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.