டெல்லி:

கொரோனா  வைரஸ் பரவல் பீதி காரணமாக,  மத்தியஅரசு ஊழியர்கள் ‘பயோமெட்ரிக் வருகைப் பதிவு’க்கு இந்த மாதம் முழுவதும் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் பரவி கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, தலைநகர் டெல்லியில் ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுஅலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவேட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்தியஅரசும், அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை பதிவை உறுதி செய்யும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கு இந்த மாதம் 31ந்தேதி வரை தற்காலிகத் தடை விதித்துள்ளது.

பயோமெட்ரிக் உபகரணத்தில்,  ஒருவர் தனது விரல் மூலம் பதிவு செய்யும்போது, அவரிடம் இருந்து கொரோனா வைரஸ் தொற்று, மற்றொருவர் தனது கை விரலை வைக்கும் சமயம் பரவும் வாய்ப்பு உள்ளதால் பயோமெட்ரிக் வருகை பதிவேடுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.