புதுடெல்லி:

ந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 999 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 942 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 23.96 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 47,033 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 6,53,622 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.


இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அச்சுறுத்துகிறது என்றும் அதன் தாக்கம் இன்னும் குறையவில்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில், “ பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுவே சிறப்பான நிலை என்றால், மோசமான நிலை என்று எதை சொல்வார்” என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக உலக அளவில் மற்ற நாடுகளை விட அதிகமான குணமடைந்தோர் விகிதமும், குறைந்த இறப்பு விகிதமும் பதிவாகி, மிகச் சிறந்த நிலையில் இந்தியா உள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.