சிங்கப்பூர்:

கொரோனா  நோய் தாக்குதல் தொடர்வதை அடுத்து  சிங்கப்பூரில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் மொத்தமாக பொருட்களை வாங்கி வீடுகளில் ஸ்டாக் வைத்துக்கொள்வதை தடுக்கும் நோக்கில் அங்குள்ள ஃபேர் பிரைஸ் கடைகளில் புதிய  கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலைத் தொடர்ந்து சிங்கப்பூரில் ஆரஞ்சு நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்குள்ள தேசிய தொழிற்சங்க யூனியன் காங்கிரஸ் (National Trades Union Congress (NTUC)) நடத்தும் சூப்பர் மார்க்கெட்டுகளில் மக்கள் அளவுக்கு அதிகாமான பொருட்களை வாங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதை தடுக்கும் நோக்கிலும், அனைவருக்கும் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், நேற்று (பிப்ரவரி 9) முதல்  அனைத்து என்டியுசி ஃபேர்பிரைஸ் விற்பனை நிலையங்களிலும், ஒரு வாடிக்கையாளருக்கு நான்கு பேக் காகித பொருட்கள், இரண்டு மூட்டை அரிசி மற்றும் நான்கு பேக் நூடுல்ஸை உட்ன் 50 வெள்ளிகளுக்குள் மட்டுமே காய்கறிகள் வாங்கவும் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிப்பு வைக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறிய என்டியுசி ஃபேர்பிரைசின் குழும தலைமை நிர்வாக அதிகாரி சியா கியன் பெங் ,  பொதுமக்கள் தேவையான பொருட்கள் மட்டுமே வாங்குங்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தற்போதைய நிலையில், தேவைக்கு அதிகமாக இருப்புகள் இருப்பதாக தெரிவித்து உள்ளவர்,  ஒன்பது மில்லியன் கழிவறைப் பயன்பாட்டு தாள்கள், 1.2 மில்லியன் உடனடி நூடுல்ஸ் பாக்கெட்டுகள், நான்கு மில்லியன் கிலோ அரிசி ஆகியவை இருப்பில் இருக்கிறது, மேலும் கூடுதல் பொருட்கள் வந்துகொண்டிருக்கின்றன, எனவே உணவுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்து உள்ளார்.