சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமுகப்பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கி உள்ளதால், மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். மேலும்,  , கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இருந்தாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக நாள் ஒன்றுக்கு  6,000 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.அதே வேளையில் குணமடைவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. உயிரிழப்பும் குறைந்து வருகிறது.

தற்போதைய நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  4,45,851 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 7608  பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 3,86,173 ஆக உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக சென்னையில்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,724ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், கடலூரில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்pjய  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், மாவட்டத்திற்கு ஒரு சித்தா மையம் திறந்து வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் கொரோனா பரவல் இன்னும் சமுகப்பரவலாக மாறவில்லை, பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.