கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியதிலிருந்து பல்வேறு வழிகளில் நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் லாரன்ஸ். இதனால் அவருக்கு சமூக வலைதளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அசோக் நகரில் லாரன்ஸ் நடத்தி வரும் ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 21 பேருக்கு தொற்று இருப்பதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
அது தொடர்பாக நேற்று (மே 28) தனது சமூக வலைதள பதிவில் கடிதமொன்றை வெளியிட்டுள்ளார்.


“நான் செய்யும் சேவைகள் என் குழந்தைகளைக் காக்கும் என்று நம்புகிறேன். அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு என் நன்றிகள்.
ஒரு வாரம் முன்பு சில குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி தெரிந்தது. பரிசோதனையில் 13 குழந்தைகள் 3 ஊழியர்கள், 2 மாற்றுத் திறனாளி ஊழியர்கள் ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது எனக்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது.
ஆனால் மருத்துவர்களிடம் பேசிய பிறகு குழந்தைகளின் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு அவர்கள் நலமாக இருப்பதாகக் கூறினார்கள். அவர்களின் காய்ச்சல் குறைந்து வைரஸ் நெகட்டிவ் என்று வந்ததும் அவர்கள் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சூழலில் உடனடியாக உதவி செய்த எஸ்.பி வேலுமணி அவர்களுக்கு எனது நன்றிகள்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் பி.ஏ. ரவி அவர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றிகளை கூறிக் கொள்கிறேன். நாம் செய்யும் சேவை என் குழந்தைகளை காக்கும் என்று நம்புகிறேன். குழந்தைகள் விரைவில் நலம் பெற அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள்.. சேவையே கடவுள்” என பதிவிட்டுள்ளார் .