திருவனந்தபுரம்:

கொரோனா வைரஸ் தாக்கம்  காரணமாக கேரள மாநிலம் முழுவதும்  7வது வகுப்பு வரை பள்ளிகளுக்கு இந்த மாதம் முழுவதும் விடுமறை விடப்பட்டுள்ளது. மாநில முதல்வர் பிரனராயி விஜயன் இதற்கான அறிவிப்பை  வெளியிட்டு உள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா உலக நாடுகளை மிரட்டி வருகிறது. இந்தியாவிலம் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 49 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள நிலையில், கேரளாவில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஏற்கனவே 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று  மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  12ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,116 பேர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து, வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், இந்த (மார்ச்) மாதம் முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், டியூசன் மையங்கள், அங்கன்வாடி மையங்கள், மதராஸாக்கள் சினிமா தியேட்டர்கள்  மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  8,9,10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்துதரப்படும் என்றும் மாநில அரசு அறிவித்து உள்ளது.