டெல்லி: கொரோனா வைரசால் நாடு முழுவதும் உள்ள கனரக வாகன ஓட்டுநர்கள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. இந் நிலையில், நாடு முழுவதும் உள்ள கனரக வாகன ஓட்டுநர்கள் போதிய உணவின்றி தவித்து வருகின்றனர்.

எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை கொண்டு செல்லும் டிரக் ஓட்டுநரான முகமது ஜாவேத், உணவு, தண்ணீரின்றி ஹூப்ளி சோதனைச் சாவடியில் சிக்கித் தவிக்கிறார். கொரோனா வைரஸ்  தொடர்பான அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டியிருப்பதால் எல்லையை கடக்க போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.

அரசின் உத்தரவை பின்பற்றி, லாரிகள் அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்ல கூட அனுமதிக்கப்படவில்லை. இது பற்றி ஓட்டுநர் முகமது ஜாவேத் கூறி இருப்பதாவது:

மங்களூருவில் இருந்து புறப்பட்ட நான் இப்போது ஹூப்ளி சோதனைச் சாவடியில் இருக்கிறேன். இங்கு நிறுத்தப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் என்னை முன்னோக்கி செல்ல அனுமதிக்க வில்லை.

என்னை விடுவிக்கும்படி நான் கேட்டுக்கொள்ளும்போது அவர்கள் என்னை தாக்குகின்றனர். அவர்கள் பேசக்கூட தயாராக இல்லை. நான் தண்ணீரை குடித்துக் கொண்டே உயிர் வாழ்ந்து வருகிறேன், இப்போது என்னிடம் அதுவும் முடிந்துவிட்டது என்றார்.

ஜாவேத்தை பணியமர்த்தும் ஸ்ரீ ஆனந்த் போக்குவரத்து ஏஜென்சி பங்குதாரர் சுரேஷ் கோஸ்லா கூறுகையில் அவசர அடிப்படையில் லாரிகளை விடுவிக்க மும்பை போக்குவரத்து போலீசாருடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.

எனது நிறுவனம் அத்தியாவசிய மொத்தப் பொருட்களைக் கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ளது, ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிராவுக்கான அனைத்து நுழைவு புள்ளிகளும் மூடப்பட்டிருப்பதால் வணிகத்தை தொடர இது ஒரு சவாலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.