டெல்லி:

கொசுக்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று, கொசுக்கள் மூலம் பரவுமாக என்று ஏராளமானோர் மத்திய சுகாதாரத்துறையிடம் சநிதேகங்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை கொசுக்களால் கொரோனா பரவாது என்று உறுதியளித்துள்ளது.

கொரோனா பாதிப்புடைய மனிதர்களால் மட்டுமே மற்ற மனிதர்களுக்குப் பரவுகிறது என்றும் , சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டும் பிறருக்கு அது பரவாமல் தடுப்பதற்காக முகக் கவசம் அணியலாம் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால், இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூகங்களுக்கு இடையே பரவவில்லை என்றும், வைரசால் புதிதாக பாதிக்கப்படும் வேகம் குறைந்துள்ளது. சமூக பரவல் இல்லை, இருந்தாலும் அனைவரும் எச்சரிக்கையுட னஇருப்பது அவசியம் என்றும் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் 650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் பாதிக்கப்ட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

  • கொரோனா வைரஸ் சமூகங்களுக்கு இடையே பரவவில்லை.
  • கொரோனா வைரஸ் மூலம் இந்தியாவில் புதிதாக பாதிக்கப்படும் வேகம் குறைந்துள்ளது.
  • சமூக பரவல் இல்லை என்றாலும் மக்கள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.
  • கடுமையாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் ரத்த மாதிரி சோதனை அடிப்படையில் சமூக பரவல் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
  • கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது என்பதை மக்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் கொசு மூலம் பரவும் என வதந்தி பரப்பினால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
  • இந்தியாவில் தற்போது வரை 15 லட்சத்து 24 ஆயிரத்து 266 பயணிகள் விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 22 ஆயிரத்து 928 ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.
  • அரசு வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் கொரோனா  சமூக பரிமாற்ற கட்டம் தொடங்கும். சமூக விலகல் மற்றும் சிகிச்சையை நாம் சரியாக பின்பற்றினால் அது இந்தியாவில் ஒருபோதும் நடக்காது.
  • வேண்டுகோளின் பேரில் கொரோனா பிரத்யேக மருத்துவமனைகளுக்கான பணிகள் சுமார் 17 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்  தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டைவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…