மும்பை:
காராஷ்டிராவில் நேற்று3,493 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,01,141ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 127 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 3,717ஆக அதிகரித்தது. இதன் மூலம் அம்மாநிலத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 3,717 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் மிக மோசமாக பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்துள்ள மாநிலமாக இருக்கும் மகாராஷ்டிராவின் தலைநகரான மும்பை தற்போது கொரோனாவின் தலைநகராகவும் மாறியிருக்கிறது. மும்பையில் மட்டுமே மொத்த பாதிப்பு 55,451 ஆக உள்ளது.

நேற்றுமட்டும் அங்கு 1,366 பேர் புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 90 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் மட்டும் மொத்த பலி எண்ணிக்கை 2,044ஆக உள்ளது. இதுவரை 25,152 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மும்பையில் உள்ள தாராவி குடிசைப்பகுதி ஆசியாவிலேயே பெரிய குடிசைப்பகுதி என்று வர்ணிக்கப்படுகிறது. மிகவும் குறுகலான பகுதியான இங்கு மக்கள் நெருக்கம் கற்பனைக்கு எட்டாத அளவு மிகவும் அதிகமாகும். இங்கும் கொரோனா தனது கோர முகத்தை காட்டியுள்ளது. தாராவியில் இதுவரை அங்கு 2,000க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 77 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 47.3ஆக உள்ளது, அதே போல இறப்பு விகிதம் 3.7ஆக உள்ளது.

கொரோனாவால் மகாராஷ்டிர காவல்துறையினர் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். காவல்துறையில் பணிபுரியும் சுமார் 3,300க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 36 பேர் பலியாகியுள்ளனர்.