சென்னை:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில் உள்ள 16 மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளை வரும் 31 ம் தேதி வரை மூடி வைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டின் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபராக அவர் அறியப்பட்டார். தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிகப்பட்டுள்ளதாவது:    கொரோனா வைரஸ் நோய் உலகளாவிய பொது சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்ட நிலையில், உலக சுகாதார நிறுவனம் இதனை தற்போது உலகளாவிய நோய்த் தொற்றாக அறிவித்துள்ளது. தமிழக அரசு எடுத்த தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு இல்லையென்ற போதிலும், இந்த நோய் அண்டை மாநிலங்களிலிருந்து பரவாமல் தடுக்க கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டு பயணிகளுக்கு தடை:  மத்திய அரசு சில வெளிநாட்டு பயணிகள் வருகையை தடை செய்துள்ளது. எனினும், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இங்கு திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டால், தேவைக்கேற்ப அவர்களை உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளின் படி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க தேவையான வசதிகளை அந்தந்த விமான நிலையங்களின் அருகிலேயே ஏற்படுத்த முதலைமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு:  அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா வைரஸ் நோய் நமது மாநிலத்தில் பரவாமல் கட்டுப்படுத்துவதற்கு, உடனடியாக எல்லையோர மாவட்டங்களில் உள்ள கண்காணிப்பு சோதனை சாவடிகளில், நோய் கண்காணிப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய்த்துறை, காவல்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

பள்ளி,திரையரங்கள் மூட உத்தரவு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகளுக்கும் துவக்கப் பள்ளிகளுக்கும் (1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை) 31.3.2020 வரை விடுமுறை அளிக்கவும், எல்லையோர மாவட்டங்களான தேனி, கன்னியாகுமரி, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்லையோர வட்டங்களில் உள்ள திரையரங்குகளையும், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களையும் 31.3.2020 வரை மூடவும்,

60 கோடி நிதி வழங்க உத்தரவு: கெரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை முடிக்கிவிட தமிழ்நாடு முதலமைச்சர் மாநில பேரிடர் நிதியிலிருந்து சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறைக்கு, 30 கோடி ரூபாய், போக்குவரத்துத்துறைக்கு 5 கோடி ரூபாய், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு 4 கோடி ரூபாய், நகராட்சி நிர்வாகத்திற்கு 6 கோடி ரூபாய், ஊரக வளர்ச்சித்துறைக்கு 5 கோடி ரூபாய், பேரூராட்சி இயக்குநரகத்துக்கு ரூ.2 கோடி, இந்து சமய அறநிலையத்துறைக்கு 3 கோடி ரூபாய், பள்ளிக் கல்வி,மற்றும் உயர்க்கல்வித்துறைக்கு 2 கோடி ரூபாய், அங்கன்வாடி மையங்களுக்கு 0.5 கோடி ரூபாய் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு 2.5 கோடி ரூபாய் என மொத்தம் 60 கோடி ரூபாயை உடனடியாக வழங்க ஆணையிட்டார்.

தனி அலுவலகர்கள் நியமனம்: மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் ஆகியவற்றில் தூய்மைப்படுத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், இப்பணிகளை கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்கவும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார்.

நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்: பொது இடங்களில் குறிப்பாக, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு வருகை புரியும் மக்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு எற்படுத்தவும், சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்களைக் கண்டறிந்து, அத்தகையோரை மக்கள் கூடும் இடங்களுக்கு வருவதைத் தடுக்க தகுந்த தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் இந்துசமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் ஆணையிட்டார். மேற்கூறிய பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளான மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

போர்க்கால அடிப்படையிலான முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தேசியப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்தும், தேசிய நலவாழ்வு குழும நிதியிலிருந்தும் மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியதன்பேரில், தமிழ்நாடு முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை அனைத்துத் துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படுத்த வருவாய் நிருவாக ஆணையருக்கு உத்தரவிட்டார்.

முதலமைச்சருக்கு தினமும் அறிக்கை அளிக்க உத்தரவு: கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் வருவாய் நிருவாக ஆணையருக்கு தினந்தோறும் அனுப்ப வேண்டும் என்றும், வருவாய் நிருவாக ஆணையர் அந்த அறிக்கைகளைத் தொகுத்து, சுகாதாரத் துறை அமைச்சருக்கும், முதலமைச்சருக்கும் தினசரி அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்.மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை ஊடகங்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க சுகாதாரத் துறை அமைச்சரை முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

அறிவுரைகளை பின்பற்ற பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்: பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதையும், பொது இடங்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதையும்,அடுத்த 15 நாட்களுக்குத் தவிர்க்கவும், கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்கள் பயணம் செய்வதை தவிர்க்கவும், பொதுமக்கள் அனைவரும் தனிநபர் சுகாதாரத்தினை பேணவும், குறிப்பாக வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும்,கைகளை சுத்தம் செய்யாமல், முகத்தை தொட வேண்டாம் எனவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின்போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் நுழைந்தவுடனும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும், கொரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கான முயற்சிகளை அனைவரும் மேற்கொண்டால்தான் வெற்றிபெற இயலும் என்பதை கருத்தில் கொண்டு அனைத்து தரப்பு மக்களும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடவேண்டுமென்றும், நோய்க்கான அறிகுறி உள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகவும்
முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.