லண்டன்: இங்கிலாந்தில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் 2 வாரங்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து புதிய கட்டுப்பாட்டு விதிகள் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

அதன் படி, சமூக நிகழ்ச்சிகள், பொது இடங்களில் 6 பேருக்கு மேல் கூடினால் அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். வரும் 14-ம் தேதி முதல் இந்த கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: நண்பர்கள், குடும்ப சந்திப்புகளில் 6 பேருக்கு மேல் கூடினால் தொடக்கத்தில் 9,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இந்த விதிகளை அடுத்தடுத்து மீறினால் ரூ 3 லட்சத்து 4 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் கொரோனா விழிப்புணர்வுடன் நடக்கும் திருமணங்கள், இறுதிச்சடங்குகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.