சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் சென்னை-திருப்பதி ரயில் உட்பட 11 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ள நிலையில், மொத்தம் 155 ரயில் சேவைகளை இந்த மாதம் 31ந்தேதி வரை ரத்து செய்வதாக ரெயில்வே துறை அறிவித்து உள்ளது.

தெற்கு ரயில்வே இயக்கும், மதுரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், செகந்திராபாத் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் குறிப்பிடப்பட்ட அளவில் முன்பதிவு செய்யாத 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவைத் தடுக்க உலக சுகாதார நிறுவனமும் தன்னால் இயற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய அரசும், கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

நாடு முழுவதும், பள்ளி, கல்லூரி, திரை அரங்கம், ஷாப்பிங் மால், விளையாட்டு அரங்கம் உட்பட பல பகுதிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. பல கோயில்கள் மூடப்பட்டன. மக்கள் அதிக அளவில் கூட வேண்டாம் என்றும், அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கி வருகிறது.

வெளிநாட்டுக்கு செல்லும் பல விமானங்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல பஸ் மற்றும் ரெயில் நிலையங்கள், போன்ற பகுதிகளில் பலத்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே ஒரு முக்கிய அறிவிபை வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மற்றும் திருப்பதி இடையே இயக்கப்படும் ரயில்கள் இரண்டு வாரங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் மதுரை, திருவனந்தபுரம், எர்ணாகுளம், செகந்திராபாத் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், அதுமட்டுமில்லாமல் குறிப்பிடப்பட்ட அளவில் முன்பதிவு செய்யாத 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது மட்டுமின்றி, நாடு முழுவதும் ஏற்கனவே பல பகுதிகளுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 84 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்தம் 155 ரயில்கள் மார்ச் 20ந்தேதி முதல் 31ந்தேதி வரை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்களின் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு, அவர்களின் பயணச்சீட்டுக்கான முழுப்பணமும் எவ்வித பிடிதமுமின்றி திருப்பி அளிக்கப்படும் என்றும் என்றும் ரயில்வே தெரிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக  உள்ளூர் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை 8 லட்சம் குறைந்துள்ளது என்று மேற்கு ரயில்வே  தெரிவித்து உள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து, மேற்கு ரயில்வே (டபிள்யுஆர்) புறநகர் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை  8 லட்சத்திற்கும் குறைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.