சென்னை: சென்னையில் அனுமதியில்லாக் கட்டிடங்கள் கட்டப்படும் விவகாரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக கருத்து தெரிவித்து உள்ளது.

சென்னை நெற்குன்றத்தில் பெருநகர வளர்ச்சி குழுமம் விதிகளை மீறி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதுதொடர்பான மாநகராட்சிக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. அதனால், அந்த கட்டிடம் கட்ட  தடை விதிக்க வேண்டும் என  ஸ்டீபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தொடுத்திருந்தார். அவரது மனுவில், சென்னை நெற்குன்றம் பகுதியில், ரூபஸ், ஆல்பர்ட் ஆகியோர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும விதிகளை மீறி, அனுமதியின்றிக் கட்டிடம் கட்டத் தடை விதித்து, ஆனால் செயல்படுத்தப்படாமல் உள்ளத.  2016-ல் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வளசரவாக்கம் மண்டலச் செயற்பொறியாளருக்கு உத்தரவிடக் கோரி, ஸ்டீபன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை  நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று நடைபெற்றது. அப்போது,  அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்படுவதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டுமானப் பணியைத் தொடரத் தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அனுமதியின்றிக் கட்டப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பியது.
அதற்கு பதில் தெரிவித்த மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், சம்பந்தப்பட்ட அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டதாலும், பொறியாளர் மரணமடைந்துவிட்டதாலும் நடவடிக்கை
எடுக்கப்படவில்லை என, மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2016-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸின் அடிப்படையில் ஐந்து ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கான காரணத்தையும் தெரிவிக்கவில்லை என அதிருப்தி தெரிவித்தனர். மேலும், கட்டுமானம் மேற்கொள்ளத் தடை விதித்து நோட்டீஸ் அனுப்பியதுடன் தங்கள் பணி முடிந்து விட்டதாகக் கருதி எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதால், நகரமைப்பில் பல பிரச்சினைகள் உருவாவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

னுமதியில்லாக் கட்டுமானங்களை ஆரம்ப நிலையிலேயே அதிகாரிகள் தடுக்க வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களை அகற்றக் கோரி ஏராளமான வழக்குகள் குவிந்து நீதிமன்றத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறினர்.

மேலும் 2016ம் ஆண்டு போட்ட தடை உத்தரவு மீது இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் விரிவான விளக்கத்தைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.