சென்னை:
கொரோனா காலத்திலும் பணி நியமனத்தில் ஊழலா?  என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க  பொதுச்செயலாளர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கொரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில், மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களை வெளி கொணர்தல் முறையில், ஜென்டில் மேன் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழக அரசு நியமித்து வருகிறது.
மூன்று மாதத்திற்கு மட்டுமேயான இந்த தற்காலிக நியமனத்திற்கு ,ஒரு மாத ஊதியத்தை கமிஷனாக இந்நிறுவனம் கோரி வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. அந்நிறுவனத்தின் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நிறுவனத்திடம் இப்பொறுப்பை வழங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். ஊழியர்களை எம்ஆர்பி மூலம் நேரடியாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.