புதுச்சேரி:

ஊழல் அரசியல், மோசமான நிர்வாகத்தால்தான், கடந்த 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தில்  மூழ்கியது  என்று தமிழக அரசை புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தாக்கியுள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி தனது வாட்ஸ்அப்பில் கேள்வி-பதில் வடிவில் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், இந்தியாவின் 6-வது பெரிய நகரமான சென்னை, தண்ணீரின்றி வாடும் முதல் நகரமாக உள்ளது.

கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இதே சென்னை, அதிக மழைபொழிவால் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், வெவ்வேறுவிதமான அதிகாரத்துவம் காரணமாகும்.

இதை பார்ப்பதன் மூலம் தண்ணீரை சேமிக்கவும், பாதுகாக்கவும் நாம் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம்.

இல்லையென்றால், சென்னை மாதிரியான நிலை புதுச்சேரிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை நான் மட்டுமே கூற முடியாது. ஆய்வு மூலமே உறுதிப்படுத்த முடியும். எனவே, தண்ணீரை பாதுகாக்கவும், சேமிக்க வேண்டியதும் அவசியமாகும் என்று கூறியுள்ளார்.