சென்னை

சென்னை போரூர் பகுதியில் தங்கள் மகன் மற்றும் மகளின் நடவடிக்கையால் மனம் உடைந்த தம்பதியர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர்

சென்னை போரூரை சேர்ந்த ஐயப்பன் தாங்கலில் உள்ள புஷ்பா நகரில் வசிக்கும் மனோகரனும் இவர் மனைவி ஜீவாவும் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள்.   இவருடைய மகள் கார்த்திகா இருமுறை மணம் செய்து தற்போது இரண்டாவது கணவரிடமும் சண்டையிட்டு தனியே வசித்து வருகிறார்.  மகன் சரவணன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.   அத்துடன் கணவரை பிரிந்து வாழும் ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யாமல் வாழ்க்கை நடத்தி வருகிறார்.

இருவருக்கும் புத்திமதி கூறியும் இருவரும் கேட்கவில்லை.   இதனால் மனோகரனும் அவர் மனைவி ஜீவாவும் தற்கொலை செய்துக் கொள்ள முடிவு எடுத்துள்ளனர்.   முதலில் விஷமருந்திய ஜீவா மயங்கி விழுந்த பின் மனோகரன் தீக்குளித்து இறந்துள்ளார்.   புகை வருவதைக் கண்டு அக்கம் பக்கத்தோர் போலீசுக்கு தகவல் அளிக்கவே அவர்கள் வந்து இரு உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வீட்டை சோதனை இட்டபோது மனோகரன் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.  அக்கடிதத்தில் தங்கள் உடலை புதைக்க வேண்டாம் எனவும் எரிக்க வேண்டும் எனவும் மேலும் இறுதிச் சடங்குக்காக  தலா ரூ. 2 லட்சம் காசோலையும் எழுதி வைத்து உள்ளதாக மனோகரன் குறிப்பிட்டுள்ளார்.   அக்கடிதத்தில் தங்களது  உறவினர் யார் யாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.