திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஸ்வப்னாவை வரும் 21ம் தேதி வரை  காவலில் எடுக்க என்ஐஏக்கு அனுமதி தரப்பட்டு உள்ளது.
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சல் ஒன்று ஆய்வு செய்யப்பட்டது அப்போது அதில்  ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த விவகாரத்தில் தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கும், சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக 4 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான ஸ்வப்னா பெங்களூரில் இருப்பதாக என்ஐஏவிற்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற என்ஐஏ படையினர் அவரையும், சந்தீப் நாயரை கைது கைது நேற்று பிற்பகல் கேரளாவிற்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து, கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தினர். பின்னர், நீதிமன்றம் ஸ்வப்னாவை  14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்திரவிடப்பட்டது.கர்நாடகாவில் இருந்து கேரளா வந்ததால் இருவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது.
சோதனை முடிவில் நெகட்டிவ் என வந்ததால் அவர்களை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்படும் என கூறப்பட்டது. அதன்படி,  தற்போது ஸ்வப்னாவை 10 நாள்கள் காவலில் எடுக்க என்ஐஏ மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை வரும் 21ம் தேதி வரை என்ஐஏ காவலில் விசாரிக்க அனுமதி அளித்துள்ளது நீதிமன்றம். விசாரணையின் முடிவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.