மும்பை:

சட்டவிரோதமாக போதை பொருள் தயாரித்து அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த வழக்கில் முன்னாள் நடிகை மம்தா குல்கர்னி மற்றும் அவரது கணவர் விக்கி கோஸ்வமி உள்பட 5 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த வழக்கு மும்பை போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிபதி பட்வர்தன் முன்னிலையில் விசாரணை நடந்து வருகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து மும்பை வெர்சோவா ஸ்கை என்க்ளேவ் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குர்கர்னியின் 3 வீடுகளையும் ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதன் மதிப்பு ரூ.20 கோடியாகும்.

53 வயதாகும் கோஸ்வமி போதை பொருள் கடத்தல் வழக்கில் 1997ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நீதிமன்றத்தால் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். ஆனால் அதிகாரிகளுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து அவர் 2012ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.