மும்பை: கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்ட தில் நல்ல பலன் கிடைத்துள்ளது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவில்  கோவாக்சின் தடுப்பூசியை பாரத் பயோடெக் நிறுவனமும்,  ஐ.எம்.சி.ஆர்., எனப்படும் இந்திய மருத்து கவுன்சிலும் இணைந்து   தயாரித்துள்ளன. இம்மருந்து நாடு முழுவதும் 12 பரி சோதனை மையங்களில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.  முதல்கட்டமாக   கோவாக்சினை விலங்கு களுக்கு செலுத்தி நடைபெற்ற பரிசோதனையில் நல்ல பலன்கள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப் பட்டுஉள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவும், கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணியை முடுக்கி விட்டுள்ளது.

பாரத் பயோடெக் மற்றும் ஐ.சி.எம்.ஆர் இணைந்து உருவாக்கிய கோவாக்சின் தவிர, ஜைடஸ் காடிலா ’ஜைகோவ்-டி தடுப்பூசி மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசி  நாடு முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கோவாக்சின் தடுப்பூசி  மனிதர்களுக்கு பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு, முதல்கட்டமாக  விலங்குகளுக்கு  செலுத்தி சோதனை நடத்தப்பட்டது.

அதன்படி மனிதர்களை போன்று உடல் உள் பாகங்கள் கொண்ட,  குரங்குகளுக்கு செலுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த ஆய்வுக்காக மொத்தம்   20 செம்முகக் குரங்குகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அவைகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சோதனையில், கோவாக்சின் தடுப்பூசி நல்ல பலனை கொடுத்துள்ளதாகவும்,  கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியது தெரிய வந்துள்ளது என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து,  இரண்டாவது கட்ட தடுப்பூசி பரிசோதனைக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் சென்றுள்ளது.