டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் தமது ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது.

நாடு முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தங்கள் பணியிடத்திலேயே கொரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விமான போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா 45 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்க முடிவு செய்துள்ளது. அதன்படி 45 வயதுக்கு மேற்பட்ட 6,000 ஊழியர்கள் தடுப்பூசி பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதியதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது, குறிப்பிடத்தக்கது.