டெல்லி:

கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்ச்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லியில் அனைத்து ஹோட்டல்களும் மூடப்படும் என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும், ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி, பார்சல்கள் வாங்கி செல்வது நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்துபவர்கள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தவறும்பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அது சமூக பரவலை எட்டவில்லை என விளக்கம் அளித்துள்ள கெஜ்ரிவால், டெல்லியில் 20 பேருக்கு அதிகமாக கூட தடை விதித்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள அலுவலகங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், நகரின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.