அமெரிக்காவின் நியூயார்க் ஆராய்ச்சியாளர்கள் கோவிட் -19 நோயாளிகளில் இரத்த பிளாஸ்மாவைப் பயன்படுத்தி சிகிச்சை பெற்றவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். மாயோ கிளினிக் செயல்முறைகளில் இருந்து பெறப்பட்டு, வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, கோவிட் -19 உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20,000 நோயாளிகளில் செய்யப்பட்ட ஆய்வு, நோயின் ஆரம்பக் கட்டத்தில் உள்ள மக்களுக்கு இரத்த பிளாஸ்மா சிகிச்சை மிக்க நன்மை பயக்கும் என்று தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“குணமடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட திறன் மிக்க பிளாஸ்மாவைப் முழுமையாக அறிந்துக் கொள்வதற்கான ஆய்வுகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. நாங்களும் மிக்க  நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனால், டேட்டா மற்றும் கணக்கீடுகளும் தேவைப்படுவதால் நாங்கள் மிக்க கவனத்துடனும், குறிக்கோளில் உறுதியுடனும் இருக்க வேண்டும்” என்று அமெரிக்காவின் மாயோ கிளினிக் ஆய்வின் முன்னணி ஆய்வாளர் மைக்கேல் ஜாய்னர் கூறினார். நோயின் கடுமையான நிலை மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைக்கு உட்படும்  அபாயம் இருப்பதாக கருதப்பட்டு, ஏப்ரல் 3 முதல் ஜூன் 11 வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஏழு நாட்கள் அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சையின் முன்னேற்றம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு பற்றிய டேட்டாக்கள் மதிப்பீடு செய்யப்பட்டது.

பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட முதல் 5,000 நோயாளிகளின்  பாதுகாப்பு சார்ந்த ஆய்வில்,  இறப்பு ஏற்படுவதற்கான அபாயத்தின் சாத்தியக் கூறுகள், முந்தைய நோயாளிகளின் 12 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, பிளாஸ்மா சிகிச்சையளிக்கப்பட்ட நோயாளிகளில் அது 8.6  சதவீதமாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. கடுமையான பாதகமான நிகழ்வுகள் தொடர்ந்து ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தன. இந்த விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு அறிக்கை இறப்பு விகிதத்தின் வீழ்ச்சியை வெளிப்படுத்தி, சமகாலத்தில் பிளாஸ்மா சிகிச்சையை விரைவாகப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது. ஆனால், கோவிட் -19-க்கு சிகிச்சையளிப்பதற்கான பிளாஸ்மாவின் செயல்திறன் குறித்து இந்த ஆதாரங்கள் மட்டுமே போதுமானது அல்ல” என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

சிகிச்சையின் விரைவான பயன்பாட்டின் அடிப்படையில், இதன் செயல்திறனை அறிவிக்கும் இன்டிகேட்டர்களைத் தீர்மானிக்கும் நோக்கில் ஆய்வுகள் விரிவுபடுத்தப்படுகிறது.  இந்த நேரத்தில், கோவிட் -19-க்கான ஆன்டிபாடி (வைரஸ் எதிர்ப்பு புரோட்டின்கள்) அடிப்படையிலான ஒரே சாத்தியமான சிகிச்சை திறன்மிக்க பிளாஸ்மா சிகிச்சையாகும். ஆய்வின்படி, இறப்பு விகிதம் குறைந்தாலும், இந்த ஆய்வின் பிற்பகுதியில் உள்ள நோயாளிகள் மிதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

தொற்றுநோய் உருவான ஆரம்ப காலகட்டத்தில் இருந்து, தற்போதுவரை அதிகரித்துள்ள நோய் பற்றிய அறிவின் அடிப்படையில், மேற்கொள்ளப்படும் மேம்பட்ட மருத்துவ கவனிப்பின் ஒரு பகுதியாகவும் இந்தக் இறப்பின் எண்ணிக்கை குறைவு இருக்கலாம் என்றும், மேலும் அதிகப்படியான நோயாளிகள் தங்கள் மருத்துவமனை சிகிச்சையின் ஆரம்பத்திலேயே பிளாஸ்மாவைப் பெற்றனர் என்றும் அவர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

மார்ச் மாதக் காலக்கட்டத்தில், திறன்மிக்க பிளாஸ்மாவை வழங்குவதற்கான எந்த ஒரு வரையறுக்கப்பட்ட முறையும் இல்லை. ஆனால்,  இப்போது பெரும்பாலான தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான பிளாஸ்மா நன்கொடை பெறப்படுகிறது. மேலும், அதிக நன்கொடையாளர்கள் மிக விரைவாக முன்வருவதால், அவர்களின் பிளாஸ்மாவில் வைரஸ்களைச் செயலிழக்கச் செய்யும்  ஆன்டிபாடிகள் அதிக அளவில் இருந்தன என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி, உலகளாவிய கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை 8.4 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது, அதே நேரத்தில் இறப்புகள் 453,000-க்கும் அதிகமாக உள்ளன. 2,189,128 நோயாளிகள் மற்றும் 118,421 இறப்புகளுடன், உலகின் மிக அதிகமான கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் உயிரிழப்புகளுடன் அமெரிக்கா அபாயக் கட்டத்தில் இன்னும் தொடர்கிறது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. முயற்சிகள் தொடரட்டும்!!!

தமிழில்: லயா