பின்வரும் அவ்வளவாக அறியப்படாத, ஆனால், அனைவராலும்  அறிந்திருக்கப்பட வேண்டிய ஏழு கோவிட்-19 அறிகுறிகள் இங்கே விளக்கப்படுகின்றன.

தீவிரமாக பரவி வரும் தனித்துவமிக்க கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகத்தை மிரட்டி வருவதால், உலகெங்கிலும் உள்ள நாடுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள்  மற்றும் சமூக இடைவெளி நெறிமுறைகளுடன் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த  போராடி வருகின்றன. தற்போதைய நிலையின் படி, இந்தியாவிலேயே 4.57 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 14500 பேர் இறந்துள்ளனர். இன்னும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருக்கலாம் என்ற சந்தேகமும் இருந்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த புதிய, புதிரான நோய்க்கிருமி பெரும் அழிவை ஏற்படுத்தி வருகிறது.

அறியப்படாத அறிகுறிகள்

COVID-19-க்கான ஒரு திறன்வாய்ந்த தடுப்பு மருந்தை உருவாக்க விஞ்ஞானிகளும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் அதிவேகத்தில் தீவிரமாக பணியாற்றி வருகையில், மருத்துவர்களும் சுகாதார பணியாளர்களும், வைரஸ் தொற்றின் அறிகுறிகளை முழுமையாக அட்டவணைப்படுத்த இன்னும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெரும்பாலான மக்கள் அறிகுறிகள் அற்ற அல்லது அறியப்படாத அறிகுறிகளுடன் லேசான மற்றும் மிதமான அளவில் நோயை பெறலாம். அல்லது மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமலேயே நோயிலிருந்து மீளலாம்.

ஆரம்பத்தில், நீடித்த இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு ஆகியவை கோவிட் -19-ன் அறிகுறிகளாக நம்பப்பட்டன. ஆனால் இந்த நோய் தொடர்ந்து வெவ்வேறு வயதினரிடையே பரவுகிறது, புதிய அறிகுறிகள் உருவாகின்றன. வைரஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி மேலும் ஆராயும் போது அறியப்பட்ட, பிரபலமாகாத அல்லது முன்னறியப்படாத COVID-19-ன் அனைத்து அறிகுறிகளையும் தொகுத்து வருகிறோம். அவை இங்கே விளக்கப்படுகின்றன:

வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் குமட்டல்

பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு அறிவியல் தலையங்கத்தில், நோய்த்தொற்றின் ஆரம்ப வெளிப்பாடு இரைப்பைக் குழாயில் தொற்றுவதன் மூலம் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் என்று விளக்கப்பட்டுள்ளது. இது நரம்பியல் ஈடுபாடு அல்லது சைட்டோகைன் (வைரஸ் எதிர்ப்பு செயல்பாடாக நோயெதிர்ப்பு செல்களினால் உருவாக்கப்படும் புரோட்டீன்) களின் உற்பத்தி மூலம் வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.  உலக சுகாதார அமைப்பில் வெளியான ஒரு அறிக்கையின்படி குமட்டல் மற்றும் வாந்தி ஒரு சிறிய சதவீத நோயாளிகளுக்கு (5%) பதிவாகியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கான்ஜுன்க்டிவிடிஸ் – இமையில் அலற்சி

சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு சமீபத்திய ஆய்வில், COVID-19 நோய் சில நோயாளிகளுக்கு கண்களில் சில லேசான அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், அதன்படி இளஞ்சிவப்பு கண் அல்லது சிவந்த கண்களை (வெண்படலத்தில்) உண்டாக்கலாம் என்றும் கூறுகிறது. கான்ஜுன்டிவா என்பது ஒரு தெளிவான மெல்லிய சவ்வு ஆகும். இது கண் இமைகளின் உஉட்புற மேற்பரப்பைக் குறிக்கிறது. கான்ஜுன்டிவாவில் தொற்று மிகவும் கடுமையான நோயுள்ள நோயாளிகளுக்கு காணப்படுகிறது.

தடிப்பு மற்றும் இரத்த உறைவு

சில ஆய்வு அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு புதிய, COVID-19 நோயுடன் தொடர்புடைய அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இந்த அரிய அறிகுறிகளில் காய்ச்சலுடன் கூடுதலாக சொறி, உள்ளங்கைகள் அல்லது உள்ளங்கால்கள் தோலுரித்தல், உதடுகள் உரித்தல் மற்றும் வீக்கமடைந்த கண்கள் ஆகியவை அடங்கும். மேலும், இத்தாலியிலிருந்து வந்த ஒரு ஆரம்ப அறிக்கையில், 88 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளில், 20 சதவீதம் பேர் மாறுபட்ட தோல் அறிகுறிகளான பச்சையான சிவப்பு சொறி, படை நோய், யூர்டிகேரியா, கொப்புளங்கள் மற்றும் இரத்த உறைவு போன்றவற்றை உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது. வைரஸுக்கு எதிரான நமது நோயெதிர்ப்பு செயல்பாடுகளால், தோல் வெடிப்புகள் உண்டாகலாம் எனவும் கூறப்படுகிறது.

புண்கள்

COVID-19 நோயாளிகள் தங்கள் கால்விரல்கள், உள்ளங்கால்கள் அல்லது விரல்களில் பல புண்களை உருவாக்கலாம். இது இளைஞர்கள் மற்றும் குழந்தைகளில் அதிகம் காணப்படுகிறது. விரல்கள் அல்லது கால்விரல்களின் இந்த நிறமாற்றம் இப்போது COVID –  கால் என்று அழைக்கப்படுகிறது.

தலைவலி

COVID-19 வெவ்வேறு நபர்களை வித்தியாசமாக பாதிக்கும் என்று தெரிகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, COVID-19 சார்ந்து தலைவலியில் பாதிக்கப்பட்டவர்கள் 14 சதவீதம் பேர் ஆகும். உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு நோயை எதிர்த்துப் போராடுவதால் உடலில் உருவாகும் சைட்டோகைன்கள் காரணமாக கடுமையான தலைவலி ஏற்படலாம்.

தலை சுற்றல்/மயக்கம்

வூஹானில் உள்ள ஹுவாஷோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், கோவிட் -19 நோயாளிகளில் 36 சதவீதம் பேர் தலைவலி மற்றும் தலைச்சுற்றலை அனுபவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சில நோயாளிகள் சுவாச அறிகுறிகளுடன்,  தலைச்சுற்றலும், மற்றவர்களுக்கு தலைச்சுற்றல் உள்ளிட்ட லேசான நரம்பியல் அறிகுறிகள் மட்டுமே இருந்தன. நீங்கள் கடுமையான லேசான தலைவலி அல்லது தலைச்சுற்றலை அனுபவித்தால், உடனே உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்வது அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சுவை மற்றும் வாசனை நுகர்வை இழத்தல்

ஆரம்பத்தில் குறைவான பொதுவான அறிகுறியாக கருதப்பட்ட சுவை மற்றும் வாசனை இழப்பு உண்மையில் COVID-19-ன் மிகச் சிறந்த அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம். தனித்துவமான கொரோனா வைரஸின் முக்கிய அறிகுறிகளின் பட்டியலில் இந்த அறிகுறிகள் சேர்க்கப்பட வேண்டும் என்று சமீபத்திய கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன

பேச்சு திறன் இழப்பு

COVID-19 -ன் மிகக் கடுமையான அறிகுறிகளில் ஒன்றாக பேச்சு அல்லது இயக்க இழப்பை WHO பட்டியலிட்டுள்ளது. இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது கடுமையாக அறிவுறுத்தப்படுகிறது. பிற எச்சரிக்கை அறிகுறிகளில் சில பின்வருமாறு:

  1. சுவாசிப்பதில் சிரமம் 2. மூச்சுத் திணறல் 3. மார்பு வலி அல்லது அழுத்தம் 4. நீல உதடுகள்

அறிகுறிகளை நாம் சற்றே எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்.

தமிழில்: லயா