டெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக வரும் 21ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படும் என்று இமாச்சல பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போதைய நிலையில் மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

இந் நிலையில் இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரும் 21ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஏப்ரல் 15ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.