லக்னோ: பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளதால் பான் மசாலா உற்பத்தியை நிறுத்த முடியாது என்று நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனம் வாதிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் பான் மசாலா, குட்கா விற்பனைக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை அண்மையில் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பான் மசாலா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந் நிலையில் அலகாபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஒரு வழக்கு மிகவும் சுவாரசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.பிஎம் கேர்ஸ் நிதியத்துக்கு 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளதால் பான் மசாலா உற்பத்தியை நிறுத்த முடியாது என்று ஒரு நிறுவனம் கூறி இருக்கிறது.

ரஜ்னிகாந்தா என்ற பான் மசாலா உற்பத்தியாளர் வழக்கில் தான் இந்த விவாதம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்படுகிறது. அந்த மனுவில், பான் மசாலாவை மென்று பின்னர் துப்பும் எச்சில் வழியே கொடிய கொரோனா வைரஸ் பரவும் என்பதால் என்பதால் பான் மசாலாவை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும்  தடை கோருகிறது.

அதற்கு பதிலளித்த ரஜ்னிகந்தா நிறுவனம், தனது பிரமாணப் பத்திரத்தில் “இந்த மோசமான தருணத்தில் அதன் பொறுப்புகள் பற்றி அறிந்திருப்பதாகவும், பி.எம் கேர்ஸ் நிதிக்கு ரூ .10 கோடியை வழங்கி உள்ளதாகவும், தவிர கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு 10 கோடி ரூபாய் அளித்துள்ளதாகவும் தெரிவித்தது. வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 8 ஆம் தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மாநிலத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வந்த நிலையில், உ.பி. அரசு மே 6 அன்று திடீரென தடையை நீக்க முடிவு செய்தது, புகையிலை அல்லது நிகோடின் இல்லாத பான் மசாலா மட்டுமே அனுமதிக்கப்படும். தடையை நீக்கியது குறித்து கேள்வி எழுப்பிய லக்னோவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சஞ்சய் சர்மா, எந்த வடிவத்திலும் பான் மசாலா எவ்வாறு கொரோனா வைரஸை பரப்புவதற்கான முக்கிய ஆதாரமாக மாறும் என்பதை சுட்டிக்காட்டி பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.

பான் மசாலாவை மெல்லுவது பொது இடங்களில் இன்னும் தடைசெய்யப்பட்டிருந்தாலும், அந்த பான் மசாலாவைத் துப்புவது வைரஸ் பரவுவதன் மூலம் மனித உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் கூறினார்.