புனே: கொரோனா தடுப்பூசி தயாரித்து வரும்., பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான சீரம் நிறுவனத்தில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டின் அஸ்ராஜெனெகா கொரோனா தடுப்பு மருந்து, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் நிறுவனம்,  கோவிஷீல்டு  என்ற பெயரில் தயாரித்து வருகிறது. இந்த தடுப்பூசி, 16ந்தேதி முதல்  இந்தியா முழுவதும் முதல்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  புனேவில் உள்ள  சீரம் நிறுவனத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சீரம் நிறுவனத்தின் முதல் முனையத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.  சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

சீரம் நிறுவனத்தில் கோடிக்கணக்கான டோஸ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு இந்தியா உள்பட வெளிநாடுகளுக்கும் சப்ளை செய்ய தயாராக இருந்தது. இந்த நிலையில் இன்று ஏற்பட்டுள்ள தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் பத்திரமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.