சென்னை: கொரோனா தொற்று பரவலை தடுக்கும் தடுப்பூசி சோதனைகள் மும்முரமாக நடை பெற்று வரும் நிலையில், சென்னையில் 300 பேரிடம் ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி சோதனை நடத்தப்பட  உள்ளது.

உலகநாடுகளை மிரட்டி வரும் சீனாவின் கொரோனா வைரஸ் தொற்றை அடியோடு ஒழிக்க உலக நாடுகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன. இந்தியா உள்பட பல நாடுகள் தடுப்பூசிகள் கண்டு பிடித்து, மனிதர்களிடம்  சோதனை முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.  இறுதிக்கட்ட சோதனைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தமிழகத்திலம் பல நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசி சோதனைகள் மனிதர் களிடம் சோதனை முறையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது ‘கோவிஷீல்டு’ கொரோனா தடுப்பூசி சோதனை 300 பேரிடம் நடத்தப்பட இருப்பதாக தமிழகஅரசு தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழக     சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கோவிஷீல்டு எனும் கொரோனா தடுப்பூசியை சோதனை செய்ய ஐசிஎம்ஆர் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னையை தெரிவு செய்துள்ளது.

இதனையடுத்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை ஆகிய இரண்டு இடங்களிலும் சுமார் 300 நபர்களிடம் கோவிஷீல்டு செலுத்தி சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசி டி-செல்கள் என்று அழைக்கப்படும் வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும் எனவும், இந்த வெள்ளை அணுக்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட செல்கள் மீது தாக்குதல் தொடுத்து உடனடியாக அதனை அழித்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இரண்டாம் கட்ட ஆராய்ச்சியை தொடர்ந்து மூன்றாம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வெகு விரைவில் கொண்டு வரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.