சென்னை:

காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜர் பெருமாள் கோவிலில் வெடி வெடிக்கத் தடை விதிக்கப்படுவமாக மாவட்டநிர்வாகம்  சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பக்தர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அங்குள்ள சாஸ்திரிகள் தரப்பிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாசு காரணமாக இந்தியா முழுவதும் வெடி வெடிக்க கடுமையான கட்டுப்பாடகள் விதிக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பள்ளி கல்வி துறை, உள்ளூர் நிர்வாகம் மற்றும் அரசுசாரா அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து பல்வேறு  நடவடிக்கை எடுத்துவருகிறது.

தீபாவளி பண்டிகையின்போது ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசினை குறைக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் விநியோகித்தல் மற்றும் பட்டாசு உபயோகிக்கும் கால அளவை எடுத்துரைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜர் பெருமாள் கோவிலில் வெடி வெடிக்கத் தடை விதிக்கப்படுவமாக  அறிவித்து நோட்டீஸ் ஒட்டியுள்ளது. இது அங்குள்ள தீட்சிதர்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடராஜ சாஸ்திரி, தீபாவளி திருநாள் அன்று பல கோவில்களில் புறப்பாடு சமயம் தீபாவளி சரங்கள் கொளுத்தி பக்தர்கள் பரவசப்படுவார்கள். ஆனால் இன்று ஒரு சுற்றறிக்கை இதை தடை செய்து வெளியிடப்பட்டுள்ளது.

இது அரசு ஒப்புதலுடன் வெளியிடப்பட்டதா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர், உடனடியாக இந்த தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

கோவிலுக்கு வரும் பக்தர்களும், எப்போதும் போல வெடி வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், ஆங்கில_புண்தாண்டுக்கு விடிய விடிய வெடி வெடிக்க அனுமதிக்கும்போது, இந்து மக்களின் பண்டிகையான தீபாவளிக்கு வெடி வெடிக்க தடை விதிப்பது சதேச்சதிகாரம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர்.