நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் விவசாய சங்க தலைவர் ஒருவர் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதியுள்ள உருக்கமான கடிதம் படிப்பவர்களின் மனதை கரைய செய்கிறது.

கடனுக்காக வங்கியில்  வைக்கப்பட்ட தாலியை திரும்ப தர மறுத்த அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கடிதத்தில் உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

நெல்லை மாவட்டம்  அருகே உள்ளது மானூர். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்தே வாழ்க்கை கழித்து வருகின்றனர்.

இந்த பகுதியை சேர்ந்தவர் வேம்புகிருஷ்ன். இவர் அந்தப்பகுதி சித்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவராக இருக்கிறார்.

தனது மனைவியின் தாலியை அருகிலுள்ள இந்திய ஒவர்சீஸ் வங்கியில் அடகு வைத்து விவசாயம் செய்துள்ளார். ஆனால், இயற்கை பொய்த்து போனதால் இந்த ஆண்டு விவசாயம் நொடிந்து போனது. இதன் காரணமாக அவர் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த அவகாசம் கேட்டுள்ளார்.

ஆனால், ஐஓபி வங்கி நிர்வாகத்தினரோ, வேம்புகிருஷ்ணனை கடனை திருப்பித்தரச் சொல்லி துன்புறுத்தி உள்ளனர். அவருக்கு மனஉளைச்சல் தரும்படியாக பேசி உள்ளனர். இதன் காரணமாக மனம் உடைந்த  விவசாயி வேம்புகிருஷ்ணன் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இதையறிந்த போலீசார் தற்கொலை செய்த விவசாயியின் உடலை கைப்பற்றி, வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, வேம்புகிருஷ்ணன் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

தற்கொலை செய்து கொள்வதற்க முன் விவசாயி வேம்புகிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளருக்கு ஒருபக்க கடிதத்தில் தனது தற்கொலைக்கான காரணத்தை விவரித்து எழுதி உள்ளார்.

கடித்ததில், விவசாயம் செய்வதற்காக தனது மனைவியின் தாலியை வங்கியில் அடகு வைத்த தாக உருக்கமுடன் எழுதியுள்ர்ளார். ஆனால் பயிர் கடனை காரணம் காட்டி, தனது மனைவியின் தாலியை திருப்பி தராமல்  ஐஓபி அதிகாரிகள் கெடுபிடி செய்தும், மனம் நோகும்படி பேசியும் துன்புறுத்தியதாக  குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தாலியை கேட்டு சென்ற தம்மை மனஉளைச்சலுக்கு ஆளாக்கி, வலுக்கட்டாயமாக வங்கியிலிருந்து வெளியேற்றியதால், அவமானப்பட்டு,  மனமுடைந்து தான் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்

கடன் தொல்லை காரணமாக மேலும் ஒரு விவசாயி இன்று தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய சங்க தலைவர் ஒருவரே வங்கி அதிகாரிகளின் அராஜகமான நெருக்குதலுக்கு ஆளாகி தற்கொலை செய்திருப்பது தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்கத்தினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.