புதுடெல்லி: ரசிகர்கள் இல்லாமலேயே, காலி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று இந்திய கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தற்போது உலகளாவிய கொரோனா பரவல் காரணமாக, பல கிரிக்கெட் தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், போட்டிகளை காலி மைதானத்தில் நடத்துவது குறித்த பரிசீலனையும் தற்போது உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. கிரிக்கெட் மட்டுமின்றி, அனைத்து விளையாட்டுகளுக்குமே இதே நிலைதான்.
இந்நிலையில், விராத் கோலி கூறியதாவது, “எதிர்காலத்தில், ரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படலாம். இதை, மற்ற வீரர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று எனக்குத் தெரியாது. ஏனெனில், நாங்கள் அனவைரும் பல்லாயிரக்கணக்கான ரசிர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் ஆடிப் பழகியவர்கள்.
விளையாட்டு வீரர்கள் கூடிய வி‍ரைவில் போட்டியில் பங்கேற்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். போட்டிகள் எப்படி நடத்தப்பட்டாலும் நாங்கள் விளையாடுவதற்கு தயாராகவே இருக்கிறோம். ஆனால், ரசிகர்கள் நிறைந்திருக்கும்போது இருக்கும் அந்த மந்திர சூழல் வருவதெல்லாம் மிகவும் அரிது” என்றார் கோலி.