சென்னை:

மிழக மருத்துவ கல்வியில்  போலி சான்றிதழ் சமர்ப்பித்து சேர முயற்சி செய்தால், அவர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர்  விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழக சட்டமன்றம் இன்று வழக்கம் போல்  காலை 10 மணிக்கு கூடியது.  தொடர்ந்துரு  கேள்வி நேரம் நடைபெற்றது.  அப்பபோது நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அப்போது, தமிழக மக்களை ஏமாற்றி வரும் சட்ட அமைச்சர் சண்முகம் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது.

நீட் தேர்வு தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 2 தீர்மானங்கள் குறித்து குடியரசு தலைவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றும், நீட் தேர்வை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அதையடுத்து, நேரமில்லா நேரத்தில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், அண்மையில் வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில் இரட்டை இருப்பிட சான்றிதழ் பெற்ற வெளிமாநில மாணவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், அவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்க கூடாது என்றும் வலியுறுத்தி, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை “கண்கொத்தி பாம்பை” போல கூர்ந்து கவனித்து வருவதாகவும், இதுவரை பெறப்பட்ட 39 ஆயிரத்து 13 விண்ணப்பங்களில் தீவிர கண்காணிப்புகளுக்கு பிறகு 3 ஆயிரத்து 516 விண்ணங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்துக்காக போராடி பெற்ற மருத்துவ இடங்களில் வெளி மாநில மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இதற்காக தனியாக குழு அமைத்து, விண்ணப்பிக்கும் மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ், மாணவரது பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், மாணவரின் பெற்றோர் தமிழ்நாட்டில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ், மாணவர் மற்றும் பெற்றோரின் சாதி சான்றிதழ், நியாயவிலை அட்டை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு சரிபார்க்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இவற்றோடு சேர்த்து, மாணவர் மற்றும் பெற்றோரிடத்தில் பிரமாண பத்திரம் ஒன்றில் கையெழுத்து பெறப்படுவதாகவும்,  அந்த பிரமாண பத்திரத்தில், மாணவரின் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் சமர்பிக்கப்பட்டடுள்ள சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானவை, அதில் ஏதாவது தவறு இருந்தால் மாணவரை தகுதி நீக்கம் செய்யலாம், கிரிமினல் வழக்கு தொடுக்கலாம் அதற்கு சம்மதிக்கிறேன் என பெற்றோரும், மாணவரும் உறுதி கூறும் வாசகம் இடம் பெற்றுள்ளதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவரையும் இந்தமுறை மருத்துவ படிப்பில் சேரவிடமாட்டோம்  என்றும் உறுதி அளித்தார்.