மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஒட்டு மொத்த வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று சோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி உள்ள சிஎஸ்கே வீரர்கள், ஊழியர்களுக்கு 3ம் கட்டமாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது.

ஆகையால் மற்ற வீரர்களும் கூடுதலாக ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன.

அதன்படி, அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று சோதனை முடிவுகள் வந்துள்ளன. மேற்கொண்டு ஒருமுறை கொரோனா பரிசோதனை செப்டம்பர் 3ம் தேதி செய்ய வேண்டி இருக்கிறது.

அந்த சோதனையிலும் நெகட்டிவ் என்றால், வீரர்கள் 4ம் தேதியில் இருந்து பயிற்சி மேற்கொள்ள உள்ளோம். அணியின் மற்றொரு வீரர் ஹர்பஜன் சிங், செப்டம்பர் மாத முதல் வாரத்தில் அணியுடன் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது  என்று சிஇஓ காசி விஸ்வநாதன் கூறி உள்ளார்.