துபாய்: ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 19ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தொடர் நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளன.

கொரோனா பரவல் தடுப்பு விதிகளை பின்பற்றி பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந் நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தமது விலகலுக்கு சொந்த விஷயங்களே காரணங்கள் என்றும், இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டாகவும் கூறியுள்ளார். அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:

அன்பு நண்பர்களே, தனிப்பட்ட காரணங்களினால் நான் இந்த ஆண்டு ஐ.பி.எல் விளையாட மாட்டேன். அவை கடினமான காலங்கள், நான் எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட உள்ளேன், தனிமையை  எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.