சென்னை:
மிழகத்தில் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காணும் பொங்கல் (ஜன.,16) அன்று அனைத்து கடற்கரையிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

தமிழகத்தில் இன்றுடன் (டிச.,31) முடிவடையவுள்ள ஊரடங்கினை ஜன.,31 வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தற்போதுள்ள நோய் பரவல் நிலை மற்றும் வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரசின் தாக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு டிச.,31 வரை தமிழகம் முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் கீழ்க்கண்ட தளர்வுகளுடன், ஜன.,31 வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

தளர்வுகள்:

* உள் அரங்கங்களில் மட்டும் 50 சதவீத இருக்கைகள் அல்லது அதிகபட்சம் 200 பேர் பங்கேற்கும் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார, கல்வி மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி.
* திரைப்படம் மற்றும் சின்னத்திரை உட்பட திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு, பணி செய்யும் நபர்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பின்றி பணி செய்ய அனுமதி.
* நேரக் கட்டுப்பாடுகளை தளர்த்தி, அனைத்து வழிபாட்டு தலங்களிலும், வழக்கமான நேர நடைமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதி.

கட்டுப்பாடுகள்:

* புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை தவிர தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு முறை தொடரும்.
* மத்திய அரசு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை தொடரும்.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவித தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
* காணும் பொங்கல் அன்று மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.