பெங்களூரு: கர்நாடகாவில் கோலார், உடுப்பி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கை தளர்த்துவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால், முதற்கட்டமாக  21 நாள்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர்,  2ம் கட்டமாக மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 29,435 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 6,869 பேர் குணமடைந்து உள்ளனர்.  இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் கொரோனாவால் 512 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 193 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் கோலார், உடுப்பி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவில் கர்நாடகா தலைமை செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:  சாம்ராஜ்நகர், கோப்பல், சிக்மங்களூரு, ராய்ச்சூர், சித்ரதுர்கா, ஹாசன், சிவ்மோகா, ஹாவேரி, யாத்கிர், கோளார், உடுப்பி, கொடகு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்கலாம்.

சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்த மாவட்டங்களில் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும். மாநகராட்சி எல்லையை தாண்டியுள்ள பகுதிகளில் அனைத்து கடைகளும் இயங்கலாம்.

மால்களில் உள்ள கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இந்த மாவட்டங்களில், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கடைகளும் திறக்கலாம். அவை மார்க்கெட் மற்றும் மால்களில் இருந்தால், அதனை திறக்க அனுமதியில்லை. அனைத்து வேலை இடங்களிலும், 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படுகிறது.

அவர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டியது கட்டாயமாகும். பெங்களூரு கிராமப்புறம், பல்லாரி மற்றும் மாண்டியா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடைகளையும், தொழிற்சாலைகளும் மீண்டும் திறப்பது குறித்து மாவட்ட பொறுப்பு அமைச்சர் முடிவெடுப்பார். இதேபோல், மீதமுள்ள 8 மாவட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை, தற்போது உள்ள கட்டுபாடுகளே தொடரும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.