மும்பை: கொரோனா காலத்தில், பொதுப் போக்குவரத்து முடங்கியதால், மக்களில் பலரின் கவனம் சைக்கிளை நோக்கித் திரும்பியதால், சைக்கிள் விற்பனை அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாதாரண மக்களால் எளிதில் வாங்க முடிந்த வாகனம் சைக்கிள் மட்டுமே. கொரோனா போக்குவரத்து முடக்கத்தால் சைக்கிளின் விற்பனை கடந்த 5 மாதங்களில் அதிகரித்தது.
அதாவது, சைக்கிள் விற்பனை இரண்டு மடங்கு அதிகரித்ததாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது; பல நகரங்களில், மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ற சைக்கிளை வாங்குவதற்காக காத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற நிலை, நாட்டில் இப்போதுதான் முதன்முறையாக உருவாகி இருப்பதாகவும் அவை தெரிவிக்கின்றன.
கடந்த மே முதல் செப்டம்பர் வரையிலான 5 மாத காலத்தில், விற்பனையானது 41.81 லட்சமாக உயர்ந்திருப்பதாக அகில இந்திய சைக்கிள் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில், சைக்கிள் விற்பனை 4.57 லட்சமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் இரு மடங்கு உயர்ந்து 8.51 லட்சமாக அதிகரித்தது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 11.22 லட்சம் சைக்கிள்கள் விற்பனை ஆகியிருக்கின்றன.
கடந்த, 5 மாதங்களில், சைக்கிள் விற்பனை கிட்டத்தட்ட 100% அளவுக்கு அதிகரித்துள்ளது. பல இடங்களில் மக்கள் முன்பதிவு செய்து காத்திருக்கிறார்கள். அனேகமாக இந்த அளவிற்கு சைக்கிளின் தேவை அதிகரித்திருப்பது வரலாற்றில் முதல் முறையாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.