கொல்கத்தா:
மேற்கு வங்க மாநிலத்தை சூறையாடிய அம்பான் புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுமென மாநில முதல்வர்  அறிவித்து உள்ளார்.
வங்க கடலில் உருவான  அம்பான்  புயல் வலுப்பெற்று சூப்பர் புயலாக மாறி நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மேல் மேற்கு வங்கத்தின் திகா – வங்கதேசத்தின் ஹதியா தீவு பகுதிகளில் கரையை கடக்கத் தொடங்கியது.

கனத்த இடி மழையுடன், மணிக்கு 125 கி.மீ. வேகத்திலான சூறாவளியுடன்  சுமார் 4 மணி நேரமாக கரையை கடந்தது. மாலை 6.30 மணி அளவில்தான் புயல் கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
இந்த புயலின் தாக்கத்தால், மேற்குவங்க மாநிலத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.  கொல்கத்தா விமான நிலையமே நீரில் மூழ்கியதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள் சேதமடைந்துள்ளதாக விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது
புயலால் சாலையோரங்களில் இருந்த ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து பல பகுதிகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், ஏராளமான  வீடுகள் பெருமளவில் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
புயல் காரணமாக வீடு இடிந்து விழுந்தது உள்பட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரண நிதியாக வழங்குவதாகவும் தெரிவித்தார்.
தனது வாழ்நாளில் இதுபோன்ற பேரழிவை தான் பார்த்ததில்லை என்று கூறிய மம்தா,, புயல் பாதிப்பை காண பிரதமர் நேரில் வர வேண்டும் என அழைப்பு விடுப்பேன் என்றும் தெரிவித்தார்.