பெய்ஜிங்

அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமாவை இந்தியா அனுமதித்தால் கடும் விளைவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என சீனா எச்சரித்துள்ளது. அந்தமாநிலத்தில்  தலாய் லாமா வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்குள்ள டவாங் பகுதிக்கும் அவர் செல்கிறார்.  அருணாச்சல பிரதேசத்திற்கு தலாய்லாமா  செல்வதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சென்ற மாதத்தில் பீகார் மாநிலம் ராஜ்கிரில் நடைபெற்ற புத்த மாநாட்டில், தலாய் லாமா கலந்து கொண்டதற்கு சீனா கோபத்தை வெளிப்படுத்தியது. இந்நிலையில் இரண்டாவது முறையாக தலாய்லாமா இந்தியாவுக்கு வருவது குறித்து சீனா பயங்கர அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்நாட்டின் செய்தி தொடர்பாளர் லு காங், அருணாச்சல பிரதேசத்துக்குள் நுழைய தலாய்லாமாவை அனுமதித்தால் இருநாட்டு உறவில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றார்.   தலாய்லாமாவின் அருணாச்சல பிரதேச பயணம் தொடர்பான செய்தி தங்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என அவர் கூறினார்.   இந்தியா தனது அரசியல் வாக்குறுதிகளை உறுதியாக பின்பற்றி மேலும் சிக்கலை உருவாக்கும் நடவடிக்கைகளை விர்க்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.