டெஹ்ராடூன்: பந்தியில் சரிசமமாக அமர்ந்து சாப்பிட்ட குற்றத்திற்காக, தலித் வாலிபர் ஒருவர் அடித்தே கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாரதீய ஜனதா ஆளும் உத்ரகாண்ட் மாநிலத்தில்தான் இந்த ஜாதிய கொடுஞ் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தச்சு வேலை செய்யும் ஜிதேந்திர தாஸ் எனும் 21 வயதான இளைஞர், டேரி கர்வால் மாவட்டத்தின் பாஸன் கிராமத்தில் வசித்து வருகிறார். ஒரு திருமண விருந்தில், அவர் உயர்ஜாதி இளைஞர்களுக்கு சமமாக, எதிர்ப்புறம் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். அப்போதுதான் அந்த உயர்ஜாதி இளைஞர்கள் சேர்ந்து இவரை தாக்கியுள்ளனர்.

ஆனால், வீட்டிற்கு வந்த அவர், மறுநாள் காலையில் நினைவிழந்து கிடந்துள்ளார். டெஹ்ராடூனில் அமைந்த மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் இறந்துவிட்டார். அவரின் குடும்பத்தில் சம்பாதிக்கும் நபராக அவர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.