தலித்களுக்காக குரல் கொடுக்கும் பா.ஜ.க. எம்.பி. மீது தாக்குதல்: பா.ஜ.க. மவுனம்
டேராடூன்:
கோயில்களுக்குள் தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து பேசிவரும் பாஜக எம்,பி. தருண் விஜய் கடுமையாக தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் தற்போது மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜவுன்சார் பகுதி தலித் மக்களை கோயிலுக்கு அனுமதிக்க வேண்டும் என தருண் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். பிறகு சக்ரதாவில் உள்ள சில்கூர் தேவதா கோவிலுக்கு தருண் விஜய் சென்றார். அவருடன் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தவுலத் குன்வாரும் சென்றிருந்தார்.

இருவரும் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு திரும்பிய போது, அங்கே இவர்களுக்காக காத்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இவர்கள் மீது கற்களை சரமாரியாக வீசி தாக்கினர். . இதில் தருண் விஜய் படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோயில்களில் தலித்துகளை அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து பேசிவருவதால் தருண்விஜய் தாக்கப்பட்டாரா என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தலித்துகளை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தருண்விஜய் பிரச்சாரம் செய்தததை பாஜகவிலேயே வேறு தலைவர்கள் ஆதரித்து பேசவில்லை என்பதும், தற்போது அவர் தாக்கப்பட்டது குறித்து இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.