புதுடெல்லி: இந்தியக் காவல்துறையில் பணியாற்றுவோரில் பாதியளவினர், முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சிகர தகவல் புதிய ஆய்வு ஒன்றின்மூலம் தெரியவந்துள்ளது.

முஸ்லீம்கள்தான் அதிக குற்றம் இழைக்கக்கூடியவர்கள் என்ற மனநிலையில் பாதியளவு காவல்துறையினர் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

நாட்டிலுள்ள 21 மாநிலங்கள் தேர்வுசெய்யப்பட்டு, அம்மாநிலங்களைச் சேர்ந்த 12000 காவல்துறை பணியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, பசு மாமிசம் தொடர்பாக முஸ்லீம்களின் மீது கும்பல்கள் நிகழ்த்தும் வன்முறைகள் இயற்கையான ஒன்று என்ற கருத்தை அவர்களில் கணிசமானோர் வெளிப்படுத்தினர்.

நரேந்திர மோடியின் ஆட்சியில், பசு மாமிசம் உண்டார்கள் மற்றும் பசுக் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில், இந்த 5 ஆண்டுகளில் கொல்லப்பட்ட பலரில், பெரும்பான்மையோர் முஸ்லீம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளபோதும், அரசு தரப்பில் எந்தவிதமான போதிய நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

ஆய்வில் ஈடுபட்டவர்கள், இந்திய காவல்துறையினரில் பாதியளவு பேர் இத்தகைய மனநிலையில் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்துள்ளனர்.