ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.

இந்த படத்தில் யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

டிசம்பர் 7-ம் தேதி இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி புதிய போஸ்டர் வெளியிட்டது படக்குழு.

பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட இந்தப் படம், தற்போது ஒரு வாரம் முன்கூட்டியே, அதாவது ஜனவரி 9-ம் தேதியே வெளியாகிறது. அதற்கு முன்னதாக, ஜனவரி 8-ம் தேதி அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோ திரையிடப்படுகிறது. அதற்கு முன்னதாகவே வெளிநாடுகளுக்கு படத்தின் பிரதிகளை அனுப்பிவைக்க வேண்டும். ஜனவரி 9-ம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதனால்,இந்த வருட இறுதிக்குள் விண்ணப்பித்தால்தான் திட்டமிட்டபடி படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று முடிவெடுத்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு.

லைகா நிறுவனம் தங்களது ‘தர்பார்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்த உடன், மலேசிய நிறுவனம் வெளியீட்டுக்குத் தடை கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு உறுப்பினர்கள், ‘தர்பார்’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் வன்முறைக் காட்சிகள் இருப்பதால் யு/ஏ வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.