சென்னை:  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோழைகள், அவர்களின் அநியாயத்துக்கு ஒரு போதும் தலைவணங்க மாட்டோம் என நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ஆவேசமாக பதிவிட்டுஉள்ளார்.
இந்துபெண்கள் குறித்து திருமாவளவன் பேசிய பேச்சு சர்ச்சையானதையடுத்து, அவருக்கு  எதிராக இந்து அமைப்புகள் தமிழகத்தில  ஆங்காங்கே போராட்டத்தை நடத்தி வருகிறது. இன்று பாஜகவினர் தமிழகத்தில் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.

அதன்படி,  இன்று சிதம்பரத்தில் திருமாவளவனுக்கு எதிராக பாஜக மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், சட்ட ஒழுங்கு காரணமாக இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் தடை விதித்தனர்.
ஆனால் தடையை மீறி போராட்டம் நடைபெற என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பங்கேற்க காரில் சிதம்பரம் புறப்பட்டு சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே காவல்துறையினரால் மடக்கி  கைது செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து,  தான் கைது செய்யப்பட்டது குறித்து நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில்  காட்டமாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “கோழைகள் விசிக. மகிழ்ச்சியடைய வேண்டாம். இது உங்கள் தோல்வி. நாங்கள் சக்தி உடையவர்கள் என்பதால் தான் கைது செய்துள்ளனர். அநியாயத்துக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம்.
கைது செய்யப்பட்டேன். போலீஸ் வேனில் அழைத்துச் செல்லப்பட்டேன். பெண்களின் கண்ணியத்தை காக்க எங்கள் கடைசி மூச்சு வரை போராடுவோம். மோடிஜி எப்போதும் பெண்களின் பாதுகாப்பு பற்றி பேசியுள்ளார், நாங்கள் அவருடைய பாதையில் நடக்கிறோம். அங்குள்ள சில கூறுகளின் அட்டூழியங்களுக்கு நாம் ஒருபோதும் தலைவணங்க மாட்டோம். பாரத் மாதா கி ஜெய்”  என கூறியுள்ளார்.