சென்னை:

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், மாதா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த 6 வயது சிறுமி ஹாசினியை தஷ்வந்த்(வயது 24) என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றார். அவரை போலீசார் கைது செய்னர்.

ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாயார் சரளாவை கொன்று 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு மும்பைக்கு தப்பிச் சென்றார். தனிப்படை போலீசார் மும்பையில் அவரை கைது செய்து அழைத்து வந்தபோது போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடினார்.

போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கைது செய்து பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் நேற்றிரவு 10.15 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.

போலீசாரின் விசாரணையில், தாயை கொன்ற தஷ்வந்த் தந்தையையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இன்று தஷ்வந்தை சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.